திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, June 25, 2008

பமொழிகள் ஆய்வு எண் 3

பழமொழிகள் ஆய்வு
எண் 3


ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
மூங்கில் பொல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்

ஆல்போல் தழைத்து:

ஆல மரம் போல் வேரெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம்,
அந்த அளவுக்கு ஆல மரம் நம்முடைய வாழ்க்கை
நெறிகளையும், நாம் வாழ வேண்டிய விதத்தையும்
நாம் கற்றுக் கொள்ள நமக்கு ஒரு ஆணி வேராக
இருக்கிறது

ஆல மரத்தை நன்கு கூர்ந்து கவனித்த நம் பெரியோர்கள்
ஆல் போல் தழைத்து என்று சொல்லி இருக்கிறார்கள்
ஆஹா எவ்வளவு அருமையான சுந்தரத்தமிழ் வார்த்தை
"தழைத்து" நம் நாவினால் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே எவ்வளவு ஆரோக்கியமாக உணர்கிறோம்
தழைத்தல் என்றால் பெருகுதல்; வளருதல், எவ்வளவு மங்கலமான வார்த்தைகளை நம் முன்னோர்
உபயோகப் படுத்தி இருக்கின்றனர்
ஆச்சரியமாக இருக்கிறது
என்னுடைய சிறு வயதில் என் தாயார் என் தந்தையாரிடம்
சொன்னார் "ஆத்துலெ அரிசிப் பானை நிறைந்திருக்கிறது
சாயங்காலம் வரும்போது வாங்கிக் கொண்டு வந்து
விடுங்கள் என்று"
எனக்கு சந்தேகம்... ஏனம்மா அரிசியே இல்லையே பானையில்
நிறைந்திருக்கிறதுன்னு அப்பாகிட்ட சொன்னியே
தப்பு தப்பா சொல்ற என்றேன்
அதற்கு என் தாயார் சொன்ன வார்த்தைகளை
இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்

கண்ணா தமிழ் ஒரு நல்ல மொழி
அதுனாலெ நாம எப்பவுமே நல்லதை உபயோகிக்கும் போது
வெகு ஜாக்கிறதையாக உபயோகிக்க வேண்டும்
பொதுவா தமிழ் மொழிக்குன்னு ஒரு சிறப்பு இருக்கு
நல்ல தமிழில் சாபமிட்டா உடனே பலிக்கும்னு பெரியவா சொல்லுவா....
அதுனாலெதான் முன்னெல்லாம் நம்ம நாட்டை ஆண்ட
சக்ரவர்த்திகள் கூட தமிழுக்கு மரியாதை கொடுத்தா
தமிழ்ப் புலவர்களுக்கு மரியாதை கொடுத்து
அவங்களோட மனசு கோணாம நடந்துண்டா
அத்னாலே அமங்கலமான சொற்களை சொல்லக் கூடாது
அதுனாலெதான் அரிசி இல்லேனு சொல்லாம
அரிசிப்பானை நெறைஞ்சிருக்குன்னு அப்பாகிட்ட
சொன்னேன்..... அப்பாவுக்கும் தெரியும் தமிழோட அருமை
அதுனாலெ அவர் புறிஞ்சுப்பார் ,என்றாள்
அடடா என்னே தமிழின் பெருமை
தமிழும் ஆலமரமும் இணைந்தே வளர்ந்தவை அல்லவா
தமிழும் தழைக்கும் ஆலமரமும் தழைக்கும்
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
என்னும் பாடல் காதில் ஒலிக்கிறது
ஆல மரத்தின் சிறப்பே அதன் விழுதுகள்
பெருகி மீண்டும் தரை தொட்டு வேரோடி
மீண்டும் தழைத்து .... ஆஹா எவ்வளவு உயரம் சென்றாலும் நம்முடைய அடிப்படை பாரம்பரியத்தை நாகரீகத்தை
விடாமல் அதை அடிப்படையாக வைத்து மேலும் தழைக்க வேண்டும் என்னும் தத்துவத்தை எவ்வளவு எளிதாக ஆலமரங்கள் நமக்கு சுட்டிக் காட்டி நம் அறிவைத்
தழைக்க வைக்கின்றன...?
இறைவனின் படைப்புகள் அதிசியமே...!!!!!!!

அருகு போல் வேரோடி என்பதை ஆராய்ந்தால்
அருகம் புல்லின் சாறு இதயத்தை பலப்படுத்தும்
என்று பெரியவர்கள் சொல்லுவர்
நம் இதயத்தின் அடி ஆழம் வரை சென்று
நம் இதயத்தையே பலப்படுத்தும் அருகு நிச்சயமாய்
நம் வாழ்விலும் ஒரு பெரிய தத்துவத்தை உணர்த்துகிறது
அருகம் புல்லை கொஞ்ஜம் சேகரித்துப் பாருங்கள்
அது வெகுநாட்கள் கெடாமல் இருக்கும்
அது மட்டுமல்ல அந்த அருகம் புல்லை நாம் சேகரிக்க
அதை கையினால் பறிக்கும் போது அருகம் புல்லின் தழைகள்
மட்டுமே நம் கைக்கு வரும் வேரோடு வராது
ஏனென்றால் அருகம் புல்லின் வேர் அடி ஆழம் வரையில்
நன்றாக வேரூன்றி இருக்கும் ,
அது போல நம் வாழ்வில் ஆயிரம் நிகழ்வுகள்
நம்மை அசைத்துப் பார்த்தாலும். பெயர்தெடுத்து
அழிக்க நினைத்தாலும் நம்முடைய
நல்ல பாரம்பரியங்களை முழுமையாக புறிந்து கொண்டு
நல்லவற்றைக் கடைப்பிடிப்போம்,, தீயவை செய்யோம்
என்னும் நல்ல சபதங்களில்,குறிக்கொள்களில்
நாம் ஆழமாக வேரோடி நிலைத்து நின்றால்
நிச்சயமாக நன்மையே தவிற, தீமை இல்லை
இதயம் வலுவானதாக மாறும் இதைத்தான்
நம் பெரியோர்கள் திட சித்தம் என்று சொல்லுகிறார்கள்
இதைத்தான் அருகு போல் வேரோடி என்கிறார்கள்

அடுத்து
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்
என்று சொல்லுகிறார்கள்

ஆஹா மூங்கில் போல் சூழ்ந்து
எவ்வளவு அருமையான வார்த்தை
கொஞ்சம் மூங்கில் காடுகளை மனதில்
நினைத்துப் பாருங்கள்
எப்படி அருகருகே இணையாக, பரவரலாக
கூட்டமாக, இணைந்து, அணைத்து வளர்ந்து
ஒன்றிற்கொன்று பலமாய் ,உறவுக்கு பாலமாய்
ஒற்றுமையாய் சூழ்ந்திருக்கின்றன
அது போல நாமும் இனம் ஜாதி மதம் போன்ற
எந்த பேதமும் இல்லாமல் இணைந்து அணைத்துக் கொண்டு
சூழ்ந்து நம் பலத்தை வளத்தை பெருக்கிக் கொள்வோம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று பெரியவர்கள் கூறியது போல வாழ ஆரம்பித்தால் நம்முடைய நன்மைகளுக்கு
அதுவே பெரும் பக்க பலமாக அமைந்து நம்முடைய
ஆரோக்கியமான சிந்தனைகளுக்கும் , ஆரோக்கியமான
வளமான வாழ்வுக்கும் எந்த ஒரு முடிவுமில்லாது

தாழம் பூவும் மடல் விரியும் மின்னல் வரும் வேளைதனில்
மூங்கிலும் முளை விடும் மின்னல் வரும் வேளை தனில்
இயற்கையின் ரகசியங்கள் நம்மை முகிழ்க்கவைக்கின்றன
நம் மனதை விகசிக்க வைக்கின்றன
மரம் வளர்வதை பார்க்கமுடியும்
கேட்க முடியுமா.....?

முடியும் என்பர் அனுபவஸ்தர்

மூங்கில் ஒவ்வொரு முளை விடும் போதும்
ஒரு சத்தம் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்
அதே போல
தென்னம் பாளையில் பூக்கள் மலரும் போது ஒரு சத்தம் கொடுக்கும் என்றும் அனுபவஸ்தர்கள் சொல்லுகிறார்கள்
ஆகவே பெரியவர்கள் சொல்வதையும் கேட்போம்
மரங்கள் வளருவதை பார்ப்போம், , மரம் வளருவதையும் கேட்போம் இயற்கையோடு இசைந்து வாழ்வோம்
ஆமாம் மூங்கில் குருத்துகள் வரும்போது கேட்கும் சத்தம் மத்தளமாகவும், மூங்கில் துளைகளின் வழியே பயணப்படும் காற்று ஊதும் குழலாக மாறி அளிக்கும் ஊதுகுழலின் நாதத்தையும் ரசித்து இசை பட வாழ்வோம்



ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
மூங்கில் போல் முடிவில்லாது வாழ்வோம்


அன்புடன்
தமிழ்த்தேனி

No comments: