திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, February 28, 2009

” மனிதமே உன்னைத்தேடி”

உன்னைத் தேடி உன்னைத் தேடிக் களைத்து விட்ட மனிதன் நான் பூவுலகில் எங்கும் உன்னைக் காணவில்லை, எங்கு சென்று மறைந்திட்டாய் ,கண்ணில் படும் உயிர்க்கெல்லாம் கருணையோடு கை கொடுத்து, அன்பு பாசம் நேசம் காட்டி அணைத்திட்ட கருணை நிறை தெய்வங்களே எங்கு போனீர் எங்கு போனீர்,காணவில்லை உம்மையும் உம்மைத் தேடி உம்மைத் தேடி நானும் இங்கே களைத்துவிட்டேன்

கண்ணைக் கட்டிக் காட்டில் இட்டார், கண்ணிருந்தும் குருடனாய் உண்மை தேடி அலைகின்றோம், சித்தம் தடுமாறியே சித்தரென்று பெயரெடுத்து, தெளிந்த பின்னும் தேடித்தேடி பித்தராய் உருவெடுத்து தேடுகின்றோம் மனிதமே

பாதி மனிதர் தம் மனதின் மீதி மனிதம் மறந்து போய் பீதியினால் தமை மறைத்து நடைப்பிணமாய் வாழுகின்றார், சேதி சொல்லும் தினசரியும், தேடித்தேடி பரபரப்பாய் தீச் செய்தி தமை மட்டும் வழங்குகின்ற காணொளியும் ,அவலமான செய்திகளை அளித்திங்கே வாழுதே, நல்ல சேதிகளே இல்லையென்று எண்ணித் தரம் தாழுதே,மனிதம் இங்கே வீழுதே

குணத்தையெல்லாம் விட்டுவிட்டு பணத்தின் பின்னால் ஓடுதே, பிணத்தின் நெற்றிக் காசைக்கூட எடுக்கத் தானே ஆடுதே, மனித உயிர் மதிப்பின்றி தீக்கிரையாய் ஆகுதே, சட்டம் கூட திட்டம் தீட்டி தீவினையை ஏற்றுதே, நீதி இங்கே தீயுதே ,தீவிரமாய் பல வாதம் பதுங்கி பதுங்கிப் பாயுதே மனித நேயம் தேயுதே

காவல் செய்யும் காவலும், ஏவல் செய்யும் கனவானின் கைத்தடியாய் வாழுதே, நீதி செய்யும் நேர்மையும் தலை குனிந்தே நோகுதே, அழிவுப் பாதை நோக்கியே நாடும் இன்று போகுதே, இளம் வயதுக் குழந்தைகளை இரக்கமின்றி கற்பழித்து, இணைந்து வாழும் துணையினையும் அரக்கர் போலக் கொல்லுதே, அன்னை தந்தை இருவரையும் அடித்து ஓட்டி மகிழ்ந்து விட்டு, தம் மக்கள் மட்டும் தம்மை தாங்கவேண்டுமென்னுதே,

மனிதம் எங்கே மனிதம் எங்கே நானும் தேடித் தேடியே

இளைத்து விட்டேன் களைத்துவிட்டேன் காணவில்லை மனிதமே,,முன்பிருந்த மனிதம் இன்று எங்கே போய் ஒளிந்தது? இருட்டில் வாழ்ந்த நாளிலும், மனிதம் ஒளிர்ந்த நாடிது, ஒளி பாய்ச்சி இரவையும் பகலாக்கி தேடித் தேடிப் பார்த்துவிட்டேன், காணவில்லை மனிதமே , புனிதர் எல்லாம் எங்கோ சென்று பதுங்கிவிட்டார் பயத்திலே ,இனி இங்கே வேலையில்லை என்று தாமும் நினைத்திட்டே மாயமாய் மறைந்திட்டார் காணவில்லை ஜகத்திலே

இனி பொறுக்க வழியிலை என்று பொங்கி நானும் எழுந்திட்டேன், தேடித் தேடி அலைந்திட்டேன், தேக்கி வைத்த மனிதமது எங்கேனும் கண்ணில் பட்டால் மனிதர்களே, மனிதர்களே சேதி ஒன்று கூறுங்கள் நானும் அங்கு வருகிறேன் மீண்டுமதை பெற்றெடுத்து சேர்த்தளிப்போம் உலகுக்கே



அன்புடன்

தமிழ்த்தேனீ

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 10

உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ,எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், எல்லா நாட்டினர்க்கும், பொதுவாக மானிடராய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் பொதுவாக ஏற்படுத்தப்பட்ட ஆன்மீகம் சிலபேருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல் ஆகும் போதுதான்அங்கு ப்ரச்சனை முளைக்கிறது
தெய்வம் ,இறைவன், ஸ்வாமி,அல்லா,யேசு கிருஷ்ணன்,ராமன் ,வினாயகன்,சிவன், சக்தி,என்று எப்படி அழைத்தாலும் எல்லாம் ஒருவனே ஒன்றே குலம் அது மனித குலம்,ஒருவனே தேவன் அவன் பொதுவானவன், எப்பெயர் சொல்லி அழைத்தாலென்ன
என் தாயை நான் அம்மா என அழைப்பேன், என் குழந்தைகள் பாட்டி என்று அழைக்கிறார்கள்என் குழந்தைகளின் குழந்தைகள் கொள்ளுப் பாட்டி என்று அழைக்கிறார்கள்சில குழந்தைகள் பெரியம்மா என்று அழைக்கிறார்கள்,சில குழந்தைகள் குழந்தைகள் அத்தை என்று அழைக்கிறார்கள், யார் எப்படி அழைத்தாலென்ன,என் அம்மா தானேஅதுபோலத்தான் யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டம் போல் அழையுங்கள்ஆனால் இருப்பது ஒரே தெய்வம்,அது இறைவன் நமக்கும் மேல் பெரியவன்,நம்மைக் காப்பவன்அவ்வளவுதான் ,இந்த உண்மை புரியத்தான்,ஆன்மீகம் என்று ஒன்றை பெரியவ்ர்கள் ஏற்படுத்தினார்கள்
அந்த ஆன்மீகத்தின் நோக்கமே,பிரிவினை இல்லாது மனிதன் மனிதத் தன்மையோடு வாழவேண்டும் என்பதே,நாம் அடிப்படையான இந்த நோக்கத்தையே மறந்து,நமக்குள் பல பிரிவுகளை நாமே ஏற்படுத்திக் கொண்டு,பிரிந்து,பிரிந்து நம்முடைய இளைய தலைமுறைகளுக்கும் அந்தப் பிரிவை சொத்தாக எழுதிவைத்து வருங்கால மக்களை,மக்கள் என்னும் நிலையிலிருந்து மாக்கள்என்னும் நிலைமைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறோம்,(மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள் )
மக்களை மாக்கள் நிலைக்கு தள்ளும்,பிரிவினையை அரசியல் வாதிகள் வேண்டுமானால்அவர்களின் சுய லாபத்துக்கு உபயோகப் படுத்திகொள்ளட்டும்,ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்என்று ஒரு பழ மொழி இருக்கிறது,ஆதலால் நாம் அனைவரும் பிரிந்திருந்தால்தான்அவர்களுக்கு வசதி,ஆனால் நாம் இதை உணர்ந்து ,ஜாதி,மதம் ,இனம் ,மொழி ,கலாச்சாரம் கொள்கைகள், வழிபாடுகள், அத்தனையும் மாறுபட்டு இருந்தாலும் அவரவர் வழியை அவரவர் பின்பற்றிக் கொண்டு முடிந்தால் எல்லா மனிதருக்கும் உதவிக் கொண்டு,மேற்கூறிய அத்தனை பேதங்களையும் மறந்து,மனதால் ஒன்றுபட்டால்மனிதம் பிழைக்கும், எங்கு மனிதருக்கு அநீதி இழைக்கப் படுகிறதோ,அங்கு எந்த வித பேதமும் இல்லாமல் அத்தனை மதத்தவரும் ஒன்று கூடி அநீதியை அழிக்க இணைந்தால்,அங்கே மனிதம் மலரும் , விளங்க முடியாக் கடவுளைக் கூட விளங்கிக் கொள்ளமுடியும்,கடவுள் மதத்திலில்லை,ஜாதியிலில்லை,இனத்திலில்லை,மொழியிலில்லை நிறத்திலில்லை,மணத்திலில்லை, குணத்தில் இருக்கிறான் ஆமாம்,மனிதம் தான் கடவுள்கடவுள் என்றாலே எல்லாவிதமான வேறுபாடுகளையும்,கடந்தவன் என்று பொருள்கட+உள் உன்னிலிருக்கும் கடவுளை உள்ளே சென்று,பார்க்க ,உன் ஆன்மாவைப் பார்க்க எல்லா மனிதருக்கும் உட்ப்ரயாணம் தேவை, உட்ப்ரயாணம் என்றால் ஆத்ம ஞானம்,ஆத்மயோகம்அன்பு ,கருணை ,இரக்கம் சக உயிர்களை மதித்தல் மனிதனை மனிதனாக மதித்தல்மனிதனை மனிதனாகவே நேசித்தல்,மக்களை மாக்களாக்காமல் மக்களாகவே இயல்பாக மனிதனாகவே நடத்துதல் மொத்தத்தில் மனிதம் என்பதுதான் கடவுள்,இறைவன்அதுதான் ஆன்மீகம்!

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 9

ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது
அதைத் தனியே விட்டுவிட்டு வேடிக்கை பாருங்கள்
சிறிது நேரம் விளையாடும், தன்னைச் சுற்றி யாருமே
இல்லை என்று உணரும் வினாடியில் அழத் துவங்கும்
அந்த நிலையிலே தான் எல்லா வளர்ந்த மனிதர்களும்
வளர்ந்தாலும் குழந்தைதான்,
அணைக்கும் கை இருக்கிறது ,நம்க்கு ஆபத்து வரும்போது ஆதரவாக நம்மைக் கையிலெடுத்து
ஆதரவு தர ஒரு கை எப்போதும் நம் அருகில் இருக்கிறது என்கிற நம்பிக்கை இருக்கும் வரைதான்
நாம் மனிதராக இருப்போம்,எப்போது அந்த நம்பிக்கை
நம்மை விட்டுப் போகிறதோ அப்போதே நாம் சக்தி இல்லாதவர்களாக உணர்வோம்
அதனால்தான் ஆன்மீகம் என்று ஒன்றை ஏற்படுத்தி
நம்மை காக்க எப்போதும் ஒருவர் இருக்கிறார்
என்று நமக்கு ஒரு உணர்வை பெரியவர்கள் ஏற்படுத்தினர்,

இறைவன் இருக்கிறானா ,இல்லையா என்பது
நமக்கு தேவையில்லாத சிந்தனை
இருக்கிறான் என்று எண்ணும்போது நமக்குக் கிடைக்கும் நிம்மதி அதுதான் என்றும் தேவையான ஒன்று
அந்த நிம்மதி நமக்குக் கிடைக்கவேண்டுமானால்
இறைவன் என்று ஒருவன் உண்டு என்று நாம் நம்பித்தானாகவேண்டும்
எல்லாமே மனிதனின் சுயநலத்துக்காகத்தான்
மனிதனின் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு,
கசப்பு ,அழுக்கு, தண்ணீ ர், காற்று , மண்,
எல்லாம் இருக்கிறது ஆனால் எந்த அளவு
இருக்கவேண்டுமோ அந்த அளவு இருக்கிறது
அந்த அளவு கூடினாலும், குறைந்தாலும்
உடனே வைத்தியர் அதை சமனப் படுத்த
மருந்து தருகிறார்
அது போல நம்முடைய சுயநலத்துக்காக
நாம் ஏற்படுத்திய ஆன்மீகம்
ஒரு பற்றுக் கோல் போல நமக்குப் பயன் படுகிறது
ஆனால் அங்கு சுயநலம் என்னும் பற்றுக் கோல்
சற்றே பருத்து ,சுயநலம் அதிகமாகும் போது
பொதுநலம் மறந்து போகிறது


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 8

ஆன்மீகம் என்பது என்ன….?
மனிதன் எப்போது தன்னை மீறிய சக்தி
ஒன்று இருக்கிறது,அது நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் என்று
நம்பத் தொடங்கின வினாடியிலிருந்து
ஆன்மீகம் தோன்றி வளர ஆரம்பித்தது
என்றும் சொல்லலாம்
அல்லது மனிதன் ஏற்கெனெவே இருக்கும்
ஆன்மீகத்தை உணரத் தலைப்பட்டான்
என்றும் கொள்ளலாம்


இந்தப் ப்ரபஞ்சத்தில் பிறந்த அத்தனை உயிர்களும் தங்களைக் காப்பாற்ற தங்களை மீறிய சக்தி ஒன்ரு இருக்கிறதாக நம்பத் தொடங்கின
அதனால்தான் எல்லா உயிர்களும் ஓரளவு
தன்னம்பிக்கையோடு வாழத் தலைப்பட்டன
இந்த இறை நம்பிக்கைதான் இன்று வரை நம் எல்லோறையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது
ஆன்மீகம் என்று ஒரு வழியினால்தான்
மனிதன் ஓரளவு தன்னம்பிக்கையோடு வாழ்கிறான்

நமக்கு மேல் நம்மைக் காப்பாற்ற ஒருவருமே இல்லை
நம்மை நாமேதான் காப்பாறிக் கொள்ளவேண்டும்
என்று நாத்தீக வாதிகள் சொல்கிறார்கள்
அப்படிப்பட்ட நாதீக வாதிகளுக்கு
“ உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு “
என்னும் வள்ளுவன் வாக்கிற்கேற்றார்போல்
இடுக்கண் வரும்போது அதைக் களைய
ஒரு நண்பனாவது வேண்டும் ,அப்போதுதான்
ஏதோ ஒரு நண்பனாவது இருக்கிறான் நம்மைக் காப்பாற்ற என்ரு வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பு ஏற்படும் ,இல்லையென்றால் நாம் வாழ்வது வீண் என்று விரக்தி ஏற்பட்டுவிடும்
கடலில் தத்தளிக்கும்போது பிடித்துக் கொள்ள ஒரு
சிறு கட்டையாவது கிடைக்காவிடில் மூழ்குவது நிச்சயம்
அது போன்று நமக்கு துன்பம் வரும்போது நம்மைக் காக்க நம்மினும் மேலான சக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கைதான் அந்தக் கட்டை போன்றது
தற்கொலை செய்து கொள்பவர்கள் பலர் தம்மைக் காக்க
,அல்லது தங்கள் துன்பத்தைப் போக்க யாருமில்லை
என்று தீர்மானமாக எண்னுவதால்தான் உயிரை
விடத் தீர்மானிக்கிறார்கள்

அப்படி தங்களையே அனாதைகளாய் நினைத்துக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்
அதற்காகத்தான் பெரியவர்கள் இறைவன் இருக்கிறான்
அவன் நம்மை துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான்
என்கிற நம்பிக்கையை வளர்த்தார்கள்


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 7

கணிணியைப் பற்றி அறிந்து கொண்டு கணிணியில் எப்படி செயல்பாடுகளை புகுத்த முடியும் என்று
உணர்ந்தவர்கள் தான் இவைகளை அறிய முடியும்
கணிணியைப் பற்றி ,மனிதனால் உருவாக்கப்பட்ட
கணிணியைப் பற்றி அறியவே இவ்வளவு தகுதி தேவைப் படுகிறதென்றால்
இந்தப் ப்ரபஞ்ஜத்தை படைத்த இறையைப் பற்றி அறிய
எவ்வளவு சக்தி , தகுதி ,தேவை
அத்தனையும் நாம் அடைந்து அதற்குப் பிறகு
விளங்கமுடியாக் கடவுள் ,விளக்கமுடியாக் கடவுள்
என்றெல்லாம் சொல்வோமானால் அது சரியான முறை
எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு செல்லும் பாதையைக் கண்டுபிடித்து அந்தப் பாதையில் பயணம் செய்து, அப்போதும் அந்த இடத்தை அடைய முடியாவிட்டால் அப்போது சொல்லலாம்
விளங்க முடியாத ,அல்லது விளக்க முடியாத
என்றெல்லாம்
இன்னும் நாம் போகவேண்டிய இடத்தையும்
புறிந்துகொள்ளவில்லை ,அதற்குண்டான பாதையையும்
நிர்ணயிக்கவில்லை
ஆகவே முதலில் போகவேண்டிய இடத்தை நிர்ணயித்துக் கொண்டு அதற்குண்டான பாதையை
கண்டுபிடித்து அந்த வழியில் நம் ப்ரயாணத்தை
மேற்கொண்டால் எதையும் காணலாம்
கடவுளையும் காணலாம்
பாகம் 8
திரு விவேகானந்தர்(நரேந்திரன்) முதலில் திரு ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்
சொல்லுவதைக் கவனிக்காமல்
அவ்ர் ஏதோ செய்து கொண்டிருப்பாராம்
ஒரு நாள் ராம க்ருஷ்ணபரமஹம்சர்
நரேந்திரனை அழைத்து நான் சொல்லுவதைக்
கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்று வினவ அதற்கு நரேந்திரன் தாங்கள்
இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
ஆனால் கண்ணால் காணமுடியாத ஒன்றை எப்படி நம்புவது என்ர்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
என்றாராம் ,அதற்கு ராமக்ருஷ்ணபரமஹம்சர்
நான் உனக்கு இறைவனைக் காட்டுகிறேன்
என்று கூறி தன்னுடைய தயான சக்தியால்
நரேந்திரனை தன்கையால் தொட்டு அவருக்கு
இறைவனைக் காட்டும் முயற்ச்சியில் இறங்கினார்
அப்போது தேஜோமயமாக தாங்கவொண்ணா ஒளியாக
இறைவன் நரேந்திரனுக்கு காட்சி அளித்தாராம்
அந்த அற்புத ஜோதிச்வரூபனை ,அந்த ஒளியின்
விஸ்வரூபத்தை தாங்க முடியாமல் நரேந்திரன் திகைத்துப் போனாராம்

அதற்குப் பிறகு திரு ராமக்ருஷ்ணபரமஹம்ஸர்
இறைவனைப் பார்க்க உனக்குள் சக்தியை ஏற்படுத்திக் கொள் அப்போதுதான் இறைவனைப் பார்க்கமுடியும் என்னும் தத்துவத்தை போதித்தாராம்
அப்போதுதான் நரேந்திரன் விவேகானந்தராக மாறினார் என்பர்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 6

ஒரு மஹா சக்தியை அல்லது ஒளியை ,
உதாரணமாக சூரியனை வெறும் கண் கொண்டு பார்க்க
முடியாது ,பார்த்தால் அதன் உருவம் நம் கண்ணின் சக்திக்கு சரியாக விளங்காது, அதனால் ஒரு கருப்புக் கண்ணாடியை ஒரு சாதனமாகக் கொண்டு பார்க்கும் போது அந்தச் சூரியனின் ஒளி நம் கண்ணைக் கூசாமல் ,இதமாக இருக்கிறதல்லவா,அது போல
ஒரு மஹா சக்தியை நாம் உணரவேண்டுமென்றால்
அதன் சக்தியை நாம் தாங்கிக் கொண்டு இதமாக
இறைவனை தரிசிக்க வேண்டுமென்றால்
அதற்க்கு ஏற்ப பக்தி, த்யானம் ,போன்ற பல சாதனங்களை உபயோகித்து இறைவனை விளங்கிக் கொள்ள நாம் வகை செய்து கொள்ளவேண்டும்


வானிலே செவ்வாய்க் க்ரகம் தோன்றப் போகிறது அதைக் காண விரும்புவோர் தொலை நோக்கி கொண்டு பாருங்கள் ,
சூரியக் க்ரகணம் இன்று வானிலே தெரியும் அதை வெறும் கண் கொண்டு பார்க்காதீர்கள்,கண்ணுக்கு
பாதகம் விளையும் என்றெல்லாம்
விக்ஞானிகள் சொல்கிறார்கள்
ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா
அது போல வெறும் கண் கொண்டு இறைவனைப்
பார்க்க முயலாதீர்கள்,
தியானம் , யோகம் போன்ற சாதனங்களைக் கொண்டு
இறைவனைப் பாருங்கள் அப்போதுதான் இறைவனை
விளங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லும்போது
ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது நாமும் அவர்கள் கூறும் சாதனங்களை உபயோகித்து முயன்றுதான் பார்ப்போமே

பாகம் 6.
2. விளங்க முடியாக் கடவுளா ..?அல்லது சக மனிதனா
இந்தக் கேள்விக்கு
ஒரு பதில் உண்டு
கடவுள் விளங்க முடியாதவனல்ல
விளக்க முடியாதவனும் அல்ல
விளக்கவும் முடியும் ,விளங்கவும் முடியும்
ஆனால் நமக்கு அதற்குண்டான பொறுமையும்
ஞானமும் வேண்டும்

தமிழ் மறை நூல்களில்
“ கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் “
என்று ஒரு கூற்று உண்டு
அதற்குப் பொருள்
மெய்ஞ்ஞானம் என்னும் வழியில் சென்ற பலர்
கடவுளக் கண்டிருக்கின்றனர்,
அதாவது அவர்கள் கடவுளை கானும் அளவுக்கு
தங்களுடைய ஆன்ம பலத்தைப் பெருக்கி
அதன் மூலமாகக் கடவுளைக் கண்டிருக்கின்றனர்
சாதாரணமாக நாம் உலகில் எப் பொருளைப்
பார்க்கவேண்டும் என்றாலும் கண் இமைகளைத்
திறக்க வேண்டும் ,அப்போதுதான் பார்க்க முடியும்
கண்களை மூடிக் கொண்டே அங்கு எதையும் என்னால்
பார்க்க முடியவில்லை என்று சொல்வது எப்படியோ
அது போலத்தான் கடவுளும்
அந்த மஹா சக்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால்
அதைப் பார்க்குமளவுக்கு நம் உடலை,மனதை ,நம் சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்

கணிணியில் மென்பொருளைத்தாக்கும் கிருமிகள்
இருக்கிறது என்பதை நம்முடைய கணினியின்
செயல்பாட்டை வைத்து அறிய முடியும்
ஆனால் அந்த கிருமியைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்றால் இது குதர்க்க வாதம்
அதுபோல நம் கணிணியை கிருமிகளிடமிருந்து
காப்பாற்ற எதிர்ப்பு சக்தியை நாம் இந்தக் கணிணிக்குள்
செலுத்தி அதைப் போக்க முடியும்
ஆனால் கணிணிக் கிருமிகளை எதிர்க்கும்
சக்தியை நான் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் குதர்க்கவாதம்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 5

சற்றே நினைத்துப் பாருங்கள் உண்மையான,மனப்பூர்வமான வேண்டுதலுக்கு வழிபாட்டுக்கு இப்படிப்பட்ட அரிய சக்தி இருப்பதை என் வாழ்விலேகண்கூடாகக் கண்டவன் நான்
ஆகவே ஆத்ம சுத்தியான பக்திக்கும் ,ப்ரார்த்தனைக்கும் இறைவன் மனமிறங்குகிறான்,அருள் புறிகிறான் என்பது சத்தியமான உண்மை
ஆகவே நம்முடைய உண்மையான ஆத்மசுத்தியான பக்தி ,ப்ரார்த்தனை, வேண்டுதல்கள்,வழிபாடுகள் நாம் கல்லில் வடிக்கும் இறைவனுக்கும் நம்முடைய சக்தியாக உள்ளே சென்றடையும் ,மீண்டும் அதே சக்தி நமக்கு ஏற்படும் இன்னல்களை களையும் சக்தியாக உருவெடுக்கும் என்பது பரிபூரணமான உண்மை
இறைவனை நாம் நம்முடைய சாதாரண சக்தியை உபயோகப் படுத்தி பார்க்க முடியாது என்பதனால்தான் ஒரு விக்ரகமாக அவரை வடித்து அந்த வடிவத்தை இறைவனாக ஏற்று ,வழிபட ஆரம்பித்தோம் உருவ வழிபாடுகள் இப்படித்தான் தோன்றின


இதுதான் ஒரு ஆலயத்தில் ஒரு கடவுளை
ப்ரதிஷ்ட்டை செய்யும்போதும்
இதே தத்துவத்தில்தான் ஆலய நிர்மாணமும்
விக்ரகப் ப்ரதிஷ்ட்டையும் நடக்கிறது
அங்கு ஒரு இறைவனை கல்லில் வடித்து
அந்தக் கல்விக்ரகத்துக்கு சக்தி கொடுக்கும் விதமாக
பலபேர் சேர்ந்து அங்கு வந்து மந்திர உச்சாடனங்கள்
செய்து அத்தனைபேரின் சக்தியையும் ஒன்றாகத் திரட்டி
ஒரு குடத்திலே மந்திர உச்சாடனத்தின் சக்தியை
அந்தக் குடத்து நீரில் இறக்கி அந்தக் குடத்து நீரை
அந்தக் கல் விக்ரகதின் மேல் பொழிந்து அந்தக் கல் விக்ரகத்துக்கு அத்தனை பேரின் திரண்ட சக்தியை அளித்து அந்தக் கல் விக்ரகத்தை இறைவனாக
சக்தி உள்ளவனாக மாற்றி,பிறகு தினமும் அந்தக் கல் விக்ரகத்துக்கு ,மந்திர உருவேற்றி
அத்தனை பேரின் திரண்ட சக்தியாகிய அந்தக் கடவுளை
எல்லோரும் வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை அந்த தெய்வத்திடம் வேண்டி பெறுதல் வழக்கமாக இருக்கிறது

இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை
நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாகின
இறைவனை விளங்கிக் கொள்ள நாம் நம்மை
தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்
அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ளமுடியும்


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 4

எந்த ஒன்றும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும்அருகிலே இருக்கும்போது நமக்கு அருமை தெரியாது,

இங்கு என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக்
குறிப்பிட்டே ஆகவேண்டும்

எல்லா இறைவன் மேலும் எனக்கு பக்தி இருக்கிறது
ஆனாலும் என் தாயார் மேல் அளவுகடந்த,பாசம் வைத்திருந்தவன் நான் ,தந்தைமேலும் பாசம் வைத்திருந்தேன் ,என் தந்தை என்னுடைய பதினொன்றாவது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்
அதனால் அந்த பக்தியும் பாசமும் இணைந்து,என் தாயாரின் மேல் செலுத்த ஆரம்பித்தேன்,ஆகவே இப்போது எல்ல தெய்வத்தையும் விட என் தாயை நான் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன்,
அது தவிர என் பூஜை அறையில் இறைவனின் படங்களுடன் என் பெற்றோர் படங்களும் இருக்கும் ,கூடவே என்னுடைய சகோதரி ராஜாமணி அவர்களின் படமும் இருக்கும், அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு, ராஜாமணி என்கிற என் சகோதரியை வணங்காமல் நான் எந்தச் செயலையும் செய்வதில்லை, தெய்வம் மனித உருவானது என்னும் சொல்லை மிக உண்மையாக என் வாழ்வில் சந்தித்து உணர்ந்தேன்


என்னுடைய ஏழாவது வயதில் எனக்கு நிமோனியா என்னும் காய்ச்சல் வந்தது, மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று கை விட்டுவிட்டனர்,
அப்போது என்னுடைய மூத்த (சகோதரி)ராஜாமணி அவர்கள் என்னை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு கண்களில் நீர் தாரை தாரையாக வழிய மனமுருகி இறைவனிடம்
“ இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு, இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு “ என்று வாய் விட்டு மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள்
என் காதில் அவள் வேண்டுதல் வார்த்தைகள் என் காதிலும் கேட்டுக்கொண்டிருந்தது, என் உடலில் அவள் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது, வாழ்வின் கடைசீ நேரத்தில் இருந்த நான் அன்று தெளிவானேன், மருத்துவர்களே ஆச்சரியப் படும் அளவுக்கு என் உடல் நிலை ஒரே நாளில் தேறியது, இறைவன் என் சகோதரி ராஜாமணியின் வேண்டுகோளுக்கு இறங்கிவிட்டான் போலும், மிகச் சாதாரணமான ,ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருந்த என் சகோதரி ராஜாமணி திடீரென்று உடல் நலம் குன்றி அன்றே வலிப்பு கண்டு இறந்து போனாள், நான் பிழைத்தேன்,
என் சகோதரி அவள் இன்னுயிரை எனக்குக் கொடுத்துவிட்டு அவள் இறந்து போனாள்…
“ உயிரை, ஆயுளைக், கூட ஒரு உடலிலிருந்து தான் நேசிக்கும் மற்றொருவருக்கு மாற்ற முடியும் வல்லமை உண்மையான மனமொத்த வழிபாட்டுக்கு உண்டு என்று அன்று உணர்ந்தேன்
இன்று வரை என் உடலில் ஓடிக் கொண்டிருப்பது என் பிரிய சகோதரி ராஜாமணியின் உயிர்தான் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை
அதனால் என் தாய்க்கு அடுத்த படியாக எனக்கு மீண்டும் ஒரு பிறப்பைக் கொடுத்த என் பிரிய சகோதரி ராஜாமணிதான் எனக்கு இன்னொரு தாய் அதனால் அவள் படத்தையும் வணங்காமல் எந்த ஒரு வேலையையும் நான் செய்வதில்லை


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 3.

ஏற்றுக் கொள்பவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றவாறு எல்லாம் மாறுகிறது என்பதற்குதான் இதை உதாரணமாக,சொன்னேன்

நாம் சிறு வயதில் ஒரு கதை கேட்டிருப்போம்
ஒரு மெலிந்த மரக் கிளையை ஒருவனிடம் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார் ஒருவர்,அந்த மெலிந்த மரக் கிளையை வெகு எளிதாக உடைத்தான் அவன்,பிறகு அதே போன்று பல மெலிந்த மரக் கிளைகளை ஒன்றாக கயிறால் இணைத்து கட்டி அதே மனிதனிடம் கொடுத்து உடைக்க சொன்னார், ஆனால் அவனால் இப்போது அந்த மெலிந்த மரக் கிளைகள் கொண்ட அந்த மொத்த கட்டை உடைக்க முடியவில்லை, இதனால் தான் பல சாதாரண சக்திகள் ஒன்றாக இணைந்து செயல் படும்போது அது ஒரு சக்தி வாய்ந்த பெரிய சக்தியாக மாறுகிறது என்பது அங்கு நிரூபணமாகிறது,இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாக்கினான் ,ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாடுகளை உருவாக்கினான்

பொதுவாக ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாட்டிற்கு சக்தி அதிகம் என்று நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்,அதனால்தான் யாருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், நாம் எல்லோரும் கூட்டாக வழிபாடு செய்கிறோம், ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது , கூட்டாக முயற்சி செய்யும்போது,அத்தனை சக்தியும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய சக்தியாக உருவாகி அந்த வழிபாட்டை நிறைவேற்றி வைக்கிறது
பெற்றோர்கள், மனைவி ,குழந்தைகள்,அத்தனை பேரையும் ஒரு தேசத்திலே விட்டுவிட்டு பிழைப்புக்காக வேறு ஒரு தேசத்திலே போய் வேலை செய்யும்போது ,தன்னுடைய பெற்றோர், குழந்தைகள், ஆசை மனைவி, இவர்களை நேரிலே பார்க்க வசதி இல்லாதவர்கள், அவர்களின் புகைப் படங்களை தன்னிடம் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தாவது ஆறுதல் அடைகிறோம் நாம்,பூவுலகத்தில் நம்மோடு வாழும் உறவினர்களிடமிருந்து வெகு தூரம் விலகி இருக்கும்போதே நாம் அவர்களின் புகைப்படங்களையாவது பார்த்து ஆறுதல் அடைகிறோமே, தற்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக எப்போது நினைத்தாலும் அவர்களுடன் பேசலாம் இணையப் புகைப்படக் கருவி மூலமாக பார்த்துக்கொண்டே பேசலாம்
ஆனால் எந்தவித விஞ்ஞான உபகரணங்களும் இல்லாத காலத்திலே மக்கள் எப்படி துன்பப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 2.

மேலும் அறிவார்ந்து சிந்திப்பவர்கள், விவரமறிந்துவர்கள்,எப்போதும் நல்ல சக்தி ஒன்று,கெட்ட சக்தி ஒன்று ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு,கெட்ட சக்திகள் நம்மை ஆட்டிவைக்கின்றன என்று ஒப்புக்கொள்வர்
கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை (அதாவது)நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்
சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், திட்டமிட்டு ஒரு கட்டுப் பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறது
நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றை செய்யலாம், தவறில்லை, அடுத்தவர்க்கு துன்பம் தராமல் இருக்க கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியா கடவுளா..?அல்லது சக மனிதனா?
என்கிற கேள்வியே தேவை இல்லையோ என்று தோன்றுகிறது, விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக்கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நாமெதையுமே செய்யமுடியாது, சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் மரியாதையை காப்பாற்றி ஆகவேண்டும் அதுதான் ஜனநாயகம், கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்கமுடியாதவன்தான், கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும்,அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான் மனிதம்

அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும், மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும்

" குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று பெரியவர்கள் சொல்வார்கள், சக மனிதர்கள் ஒரு பொதுவான மன நிலைக்குவரவேண்டும் , அனைவரும் ஒற்றுமையாக ,இயல்பாக, சகமனிதர்களிடம் அன்பாக, சகோதர மனப்பான்மையுடன் இனிமையாக பழகி வாழ்நாட்களை இனிமையாக கழிக்கவேண்டும் என்கிற என்னுடைய நியாயமான ஆவல் நிறைவேறத்தான் இதை எழுதுகிறேன்

இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்,தவறுகள் இருந்தால் எனக்கு உணர்த்தலாம், நான் தவறு என்று உணர்ந்தால் திருத்திக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்,
ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்துக்களும், உங்களுடைய சார்ந்த கருத்துக்களும்,மாற்றுக் கருத்துக்களும் இனிமையான,இதமான சொற்களோடு வரட்டும் வரவேற்கிறேன், கூடிய வரையில் அடுத்தவர் மனம் நோகாமல், நாம் எழுத முற்படுவோம்,அதற்கும் மேலாக யாராவது மனம் புண்பட்டால், அவர்கள் என்னை மன்னிக்குமாறு இப்போதே வேண்டிக் கொள்கிறேன்
ஏனென்றால் நான் சொல்ல வருவதை அழுத்தமாக, திடமாக சொல்லுவேன் ,இந்த மடல் நம் அனைவரையும் என்னையும் உட்படச் சொல்லுகிறேன், ஏதாவது சிறிதளவாவது நல்ல கருத்துக்களைக் கற்றுக் கொள்ள உதவினால் மகிழ்வேன்,நாம் அனைவருமே பழக்க வழக்கங்களினால்,அதாவது நாம் பழக்கப் பட்ட விதத்தால் அதற்கேற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதனால் நாம் எப்போதும் சரியாகத்தான் நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை,எப்போதும் தவறாக நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை

என் அம்மா என்னுடைய அம்மாவின் தாயாரை அம்மா என்று அழைப்பதைக் கேட்டு எனக்கு பழக்கம்,அதனால் அதே பழக்கத்தால் என்னுடைய தாயாரின் தாயாரை பாட்டி என்று ஒரு நாளும் நான் அழைத்ததில்லை மாறாக அம்மா என்றே அழைத்திருக்கிறேன், இதை தவறு என்று சொல்பவர்களும் உண்டு, சரி என்று ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு