திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, September 24, 2012

" ஆரியக் கூத்து "


 

 

                                                 " ஆரியக் கூத்து "
 
 

 

தாளமுடியாத பிறவியை அழித்து பேரின்பம் தனைத் தருவான், துறவியும் வெறுக்கின்ற துன்பப் பெருங்கடல், பிறவிப் பெருங்கடல் துன்பங்களை அழித்து காளமேகப் பெருமான் நம் கைப்பிடித்து அழைத்துப் போவான்.  என்று காத்திருந்தார் ராமசேஷன்.

இந்த பிறப்பை எடுத்தோமே ,இந்தப் பிறப்பில் என்ன செய்தோம், பாவம் செய்தோமா, புண்ணியம் செய்தோமா? நமக்கு நரகம் கிட்டுமா, சொர்கம் கிட்டுமா என்று தெரியாமல், பூமியிலும் இல்லாமல், ப்ரபஞ்ச வெளியிலும் இல்லாமல் நடுவே ஏதோ ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தார் ராமசேஷன்,அவருக்கு சிரிப்பாய் வந்தது,

ஆமாம் இப்போதும் தமக்கு ராமசேஷன் என்று தான் பெயரா ,அல்லது யாராவது வந்து தனக்கு வேறு பெயர் வைப்பார்களா என்று யோசித்தார், சரி இனி பெயரில் என்ன இருக்கிறது,போய்ச்சேரும் இடமல்லவா முக்கியம், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பவராயிற்றே அவர்,

ஆமாம் ஆரியக் கூத்தென்றால் என்னது அது?

ஆரியனுக்கு ஏது கூத்து? என்று யோசிக்கும் போதே ஆரியன் ஆடாத கூத்தா? என்கிற கேள்வியும் முளைத்தது, எப்படி இந்தச் சொல்வழக்கு வந்தது என்று யோசிக்கலானார்.

இப்படியே காத்திருந்தால் கால்கள் வலிக்குமே எங்காவது உட்காரலாமா? அடேடே இந்த சூக்க்ஷும சரீரத்துக்கு கால்களும் இல்லை,கால்கள் இருந்தால்தானே வலிக்கும்,உடல் இருந்தால்தானே வலி தெரியும், திடமான உருவமும் இல்லையே எங்காவது உட்கார்ந்தால் எப்படி உட்கார்ந்தாலும் அப்படியே காற்று போன பலூன் மாதிரி நைந்த துணி மாதிரி எதிலும் ஒட்டாமல் எப்படியும் இருக்கவிடாமல் அலைகிறதே இந்த சூக்ஷும சரீரம்?

அவருக்கு தன்னுடைய கடைசீக் காலம் நினைவுக்கு வந்தது, மனித உடல் இருந்த காலங்களில் அந்த உடலில் சர்க்கரை அதிகமாயிருக்கிறது,அரிசி சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொன்னது ஞாபகம் வந்தது, கூடவே அவருடைய மகன் அவருக்கு திவசம் செய்யும்போது இதை ஞாபகம் வைத்திருப்பானா? அவன் யோசிக்காமல் அரிசி சாதத்தையே படைத்தால் எப்படி சாப்பிடுவது, மறுபடியும் சர்க்கரை அதிகமாகி விடுமே , என்று யோசித்து அவருக்குள்ளாகவே சிரித்துக்கொண்டார்.

இந்த சூக்ஷும சரீரத்துக்கு வியாதிகள் உண்டா? ரத்தமும் சதையும் கொண்ட மானுட சரீரத்துக்குதானே வியாதிகள் இந்த சூக்ஷும சரீரத்துக்கு கிடையாதே என்று யோசித்துவிட்டு மீண்டும் தனக்குள்ளே சிரித்துக்கொண்டார். யாரோ ஒருவர் கைகொடுத்தார், உணர்வில் புரிநது. காளமேகம் வந்து கை கொடுக்கிறார் என்று புரிந்தது. ஏன் உனக்கு நீயே யோசித்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் யாரேனும் பார்த்தால் பயித்தியம் என்பார்களே என்று ஒரு குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன் ,கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை

ஓ கண்ணே இல்லை பின் எது புலப்படும் ? கை கொடுத்தவர் கேட்டார் நீ மீண்டும் பிறக்க விரும்புகிறாயா? அட காதுகளும்தான் இல்லை பின் எப்படி அவர் பேசுவது கேட்கிறது. இல்லை..கேட்கவில்லை மனதுக்கு புரிகிறது. யோசித்தார் எனக்கு இனி பிறவி வேண்டாம் என்றார்,

உடனே அந்த அமானுஷ்யக் குரல் இன்னும் நீ அந்த நிலையை எட்டவில்லை ஆகவே இனியும் உனக்கு பிறவி உண்டு,ஆகவே எப்படி, யாராகப் பிறக்க விரும்புகிறாய் என்று மட்டும் சொல் என்றது.

யோசிக்க ஆரம்பித்தார். ராமனாகப் பிறந்தால் கானகம் ஏகி மனையாளைப் பிரிந்து தவிக்க வேண்டும். பரசுராமனகப் பிறந்தால் தாயின் தலையையே வெட்ட வேண்டும்.

கிருஷ்ணனாகப் பிறந்தால் நல்லதே செய்துவிட்டு கெட்ட பெயரும் சம்பாதித்து பின் குறைக் கொள்ளியாக ஒதுங்க வேண்டும்.

சரி பூலோக வாசிகளான மானுடரில் பலரையும் யோசித்துப் பார்த்தார், மஹாத்மா காந்தியாகப் பிறந்தால் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்டுவார். இப்படீ ஒவ்வொன்றாக யோசித்துக்கொண்டே வந்தார்.

யாரை நினைத்தாலும் ஒவ்வொன்று தடுத்தது. சரி மீண்டும் ராமசேஷனாகவே பிறக்கலாம் என்பதே பரவாயில்லை என்றால் அடுத்த ஜென்மம் யாராக எடுக்கலாம் என்று யோசிக்கும் நிலை வரும் தோன்றியது. அவருடைய மனம் குழம்பியது, எனக்குத் தெரியவில்லை நீயே ஒரு முடிவெடுத்து ஒரு பிறப்பைக் கொடு என்று வேண்டினார்.

அட என்னிடமே திருப்பிவிட்டாயா இந்தப் ப்ரச்சனையை.இரு யோசிக்கிறேன் என்று ஆழ்ந்த சிந்தனையில் இறங்கியது தெய்வம். வெகு நேரமாகியும் பதில் வராததால் என்ன ஆயிற்று என்றார் ராமசேஷன்.

இப்போது தெய்வம் குழம்பியது ,யோசித்தது,தனக்குத்தானே பேசிக்கொண்டது சிரித்துக்கொண்டது.ஒரு பொதுவான குழப்ப நேரத்தில் தெய்வமும் ராமசேஷனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். திடீரென்று இரு அழுகுரல் ங்கா ங்கா என்று,திடுக்கிட்டு இருவரும் விழித்தனர் . ப்ரபஞ்சத்தில் புதிய ஜனனத்தின் அறிவிப்பு இரட்டைக் குழந்தையின் பிறப்பை அறிவித்தது. இப்போது இருவருக்குமே உருவமில்லை.

ஆரியக் கூத்தென்றால் என்னவென்று இருவருக்குமே ஓரளவு புரிந்தது போல் இருந்தது.

                               சுபம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

Tuesday, September 18, 2012

வினாயக சதுர்த்தி


விக்னங்கள் தீர்க்கும் விக்ன வினாயகா

சங்கடங்கள் தீர்க்கும் சங்கட ஹரநாயகா

மடைதிறந்த வெள்ளம்போலுன் அருள் தந்து

தடைகள் அகற்றி தாமதம் நீக்கி காப்பதுன் கருணை

 

வேழமுகனே மோதகஹஸ்தனே  வித்தைக்கு அதிபதியே

ஆழ உன்னை மனதில் நினைத்தேன் மூப்பு தளை

அறுக்கும் முந்தி வினாயகா  காப்புகள்பாடித்

தோப்புக்கரணம் போட்டு துதித்தே வணங்குகின்றேன்

 

அருகம்புல்லில் அர்ச்சித்தே அருள் வேண்டியே

இரு கை இணைத்தே கூப்பித் தொழுதேன்

மோனத்தவம் இருந்து மோதகம் செய்து வைத்தேன்

ஞானத்தை அருளவேணும் ஞான வினாயகா

 

தொழுகையில் துதிக்கையில் நம்பிக்கை

கொண்டே நானும் உந்தன் தும்பிக்கை

வேண்டினேன் வெற்றியை அருள்வாய்

வெற்றி வினாயகா உன் தும்பிக்கை தூக்கி ஆசியருள்வாய்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Saturday, September 15, 2012

அந்த நாள் அப்பளம் நாவிலே வந்ததே


                                                                        

                                                              ஶ்ரீராமஜெயம்

அந்த நாள் அப்பளம் ஞாபகம் நாவிலே வந்ததே நண்பரே நண்பரே நண்பரே இந்த நாள் அப்பளம் அன்று போல் இல்லையே அது ஏன் ஏன் நண்பரே

பழங்ககாலம்  போல் முறுக்கு, அதிரசம், தேன்குழல், ஓமப்பொடி, முச்சரிகை (முள் முறுக்கு) சீடை, வடாம், வற்றல் , அப்பளம் போன்றவைகளை செய்ய வீட்டில் இருக்கும் பெண்டிருக்கு மறந்து போனதோ? அல்லது அவர்களின் சுறு சுறுப்போ ஏதோ ஒன்று காரணமாகி  இப்போதைய நாட்களில் சுவையான வீட்டுப் பலகாரங்கள் , பக்ஷணங்கள் சாப்பிடாமல் நாக்கு  இயற்கையான ருசிக்காகவும் மணத்துக்காகவும் ஏங்கிகொண்டிருக்கிறது.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்த பவன், சரவணபவன் போன்றோர் அவர்கள் வியாபாரம் செய்து கொழிக்க  நம் இல்லத்தரசிகளை சுகவாசியாக மாற்றிவிட்டனர். இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க என் இல்லத்தரசியை ஏதாவது பலகாரம் செய்யேன் என்று வேண்டினேன்.

எனக்கும் வெகு நாட்களாக அப்பளம் இடவேண்டும் என்று ஆசை ,ஆனால் எனக்கு அப்பளம் செய்யும் முறை தெரியும் ,ஆனால் ஒழுங்காக இடவராது அதனால் நீங்கள் இட்டுக்கொடுப்பேன் என்று உறுதி அளித்தால் அப்பளம் செய்கிறேன் என்றாள். ஆர்வ மிகுதியின் காரணத்தால் முன் யோசனையின்றி ஒப்புக்கொண்டு விட்டேன்.

சுறு சுறுப்பாக என் இல்லத்தரசியும் அப்பளத்துக்கு அரை படி அல்லது மூன்று ஆழாக்கு உளுத்தம் பருப்பை நன்றாக மாவாக அரைத்துக்கொண்டு அந்த மாவில், ஒரு பிடித்த பிடி பிரண்டையை எடுத்து  அரைக் கைப்பிடி உப்பு சேர்த்து நீர் விட்டு அரைத்து அதை வடிகட்டி , அந்த நீரை உளுத்தம்பருப்பு மாவில் சேர்த்து , ஒரு டீஸ்பூன் சோடா உப்பைப் போட்டு , ரெண்டு அல்லது மூன்று டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து ,  அம்மிக்கல்லில் சிறிது தேங்காயெண்ணையை தடவி அந்த மாவை வைத்து இரும்பு உலக்கையிலும் தேங்காய் எண்ணையைத் தடவி மாவை நன்றாக இடி இடியென்று இடித்து கெட்டியாக சப்பாத்திமாவு செய்வது போல் கலந்து வைத்துக்கொண்டு,  ஒரு பெரிய அப்பளமாவு உருண்டையாக ஆக்கி  அதை சிறு சிறு ஊருண்டைகளாக உருட்டி வைத்துக்கொண்டு இப்போது அப்பளம் இட்டுத் தாருங்கள் என்று  அப்பளம் இடும் குழவியையும் கொண்டு வந்து என்னிடம் வைத்தாள்.

சற்று நேரம் கீழே தரையில் உட்கார்ந்து அப்பளம் இடும் மணையில் முயற்சி செய்தேன், முதுகு வலி வந்தது. சரி நின்று கொண்டு செய்வோம் என்று எண்ணி அடுக்களையில் இருந்த கிரானைட் மேடையில் கொண்டுபோய் வைத்துக்கொண்டு இடத் தொடங்கினேன்.  தொடங்கிய பின்தான் தெரிந்தது அதில் எவ்வளவு நுணுக்கம் இருக்கிறதென்று

நுணுக்கம் 1. : உருண்டையை குழவியால் அழுத்தி இடும்போது அந்த உருண்டை தரையிலோ குழவியிலோ ஒட்டிக்கொண்டால் இடவராது. நுணுக்கம் 2. : அப்பளத்தின் கனம் எல்லா இடங்களிலும் சீரான அளவைக் கொண்டிருக்குமாறு குழவியை உருட்டவேண்டும். நுணுக்கம் 3. : அப்பளம் என்றாலே பூரண சந்திரன் போல் வட்ட வடிவமாக இருக்க வேண்டும்.   நுணுக்கம் 4. : பூரண சந்திரனில் எங்கும் ஒரு துவாரம் கூட இல்லாமல் கிழியாமல்  இடவேண்டும்.

முயற்சியைத் தொடங்கினேன் , நின்று கொண்டே அப்பளம் இட்டதால் முதுகுவலி  இல்லாமல் எளிதாக இருந்தது. ஆனால் முறையாக வட்டமாக, மெலிதாக ஒரே சீரான கன அளவுடன் கிழியாமல் இடுவது ப்ரும்மப் ப்ரயத்தனமாக இருந்தது. சற்றே தூரத்தில் என் இல்லத்தரசி ஒரு மர்மமான ஏளனப் புன்னகையுடன் நின்றிருக்கிறாள். அதுவேறு  முதுகில் உறுத்திக்கொண்டே  இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விகரமாத்தன் போல் முயன்று கொண்டே இருந்தேன் .

அதிலேயே ஒன்றிப் போன நிலையில் ஒரு அதிசியம் நிகழ்ந்தது.  ஆங்கிலத் திரைப்படங்களில் அதுவும் குறிப்பாக சண்டைப்படங்களில் கடைசீக் காட்சியில் வில்லனால் அடிபட்டு இறக்கும் தருவாயில் கதாநாயகனுக்கு அவனுடைய குரு கற்றுக் கொடுத்த நுணுக்கமான  ஜூடோ, கராத்தே, குங்க்பூ, போன்ற கலைகளின் நுணுக்கம் நினைவுக்கு வந்து குற்றுயிரும் குலை உயிருமாக இருந்தக் கதாநாயகன் ஆவேசம் கொண்டு எழுந்து வில்லனை புரட்டிப் புரட்டி அடித்து தூக்கி வீசிப் பந்தாடி, அந்தரத்திலே பறந்து தாக்கி வில்லனை செயலிழக்கவைப்பது போல் எனக்குள்ளும் ஒரு வீரமும் நுணுக்கமும் பொங்கி வந்துகொண்டிருந்தது.

ஆமாம் முப்பது வருடங்களுக்கு முன்  என் தாயார்  அப்பளம் இடும்போது எனக்கும் சொல்லிக் கொடுத்த நினைவுகள் மனக்கண்ணில் அப்படியே கருப்பு வெளுப்பு நிறத்தில் ஒலியும் ஒளியுமாக படமாகத் தெரிந்தன. 

வீறுகொண்டு எழுந்து அப்பளம் இடத் தொடங்கினேன்,  கிழியாமல் இருக்க அரிசி மாவிலே தோய்த்து இட்டேன். மாவை ரொம்ப ஊட்டாதே. அப்படி மாவை ஊட்டினால் அப்பளம் பொறிக்கும்போது சிவந்து போய்விடும் என்று என் தாயாரின் குரல் காதிலே அசரீரியாக விழுந்தது .

மாவிலும் சற்றே தோய்த்துக்கொண்டு அந்த மாவு அப்பளத்திலே ஒட்டாதவாறு உதறி இடத் தொடங்கினேன்.  ஒரே சீராக வரவேண்டுமென்றால் மாவின் மேல் குழவியை சமமாக வைத்து உருட்டினால் கீழே இருக்கும் அப்பளம் தானாகவே சுழன்று நகர்ந்து எளிதாக சீரான முறையில் வரும். என்றாள் அம்மா அசரீரியாக.

அப்படியே ஏதேனும் ஒரு இடத்தில் கிழிந்துவிட்டால் சற்றே அப்பளமாவை எடுத்து அந்த இடத்தில் வைத்து அதையும் சேர்த்து இட்டால் ஓட்டை அடைந்து விடும் என்றும் அம்மாவின் குரல் கேட்டது. அப்படியே அப்பளத்தை இட ஆரம்பித்தேன் ஒரு மணிநேரத்தில் வெற்றிகரமாக சுமார் 50 அப்பளங்கள் இட்டு முடித்து இல்லத்தரசியை திரும்பிப் பார்த்தேன்.

இப்போது அவள் கண்களில் ஏளனப் புன்னகை மறைந்து ஆச்சரியப் புன்னகை மிளிர்ந்தது. கணவன்  ஆக்கபூர்வமாக எதையும் செய்யத் தயாரானவன், தன்னம்பிக்கை கொண்டவன் , தெளிவான ஞானமுடையவன், தைரியசாலி, நுணுக்கங்கள் தெரிந்தவன்  என்று தெரிந்தால் இல்லத்தரசிகளுக்கு  தானாகவே காதலும் கனிவும்  , அன்பும் பாசமும்  ஊற்றெடுக்காதோ? ஆகவே இது இல்லறம் சிறக்கவும் அருமையான வழியாகத் தோன்றியது.

அந்த ஐம்பது அப்பளங்களையும் செய்தித் தாளை விரித்து  அதில் பரப்பி வெய்யிலில் சற்று நேரம் உலர்த்திவிட்டு அப்படியே எடுத்து ஒரு தாம்பாளத்தில் போட்டு காற்றாட வைத்திருக்கிறேன். சற்றே காற்ராடியது எடுத்து ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்தால் தேவையான போது எடுத்து நெருப்பிலே வாட்டிக் காய்ச்சியும் உண்ணலாம்.

அல்லது எரியும் அடுப்பிலே வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் காய்ந்ததும்  பொறித்தும்  உண்ணலாம். வற்றல் குழம்பு கலந்த சாதத்துக்கும். ரசம் சாதத்துக்கும், புளியோதரை போன்ற கலந்த அன்னங்களுக்கும் தொட்டுக்கொண்டு உண்ணலாம்.

இப்படி பெரியவர்கள் செய்யும் போது பார்த்ததனாலேயோ , அல்லது அவர்கள் பல வருடங்களுக்கு முன் சொல்லிக்  கொடுத்ததனாலேயோ பற்பல நுணுக்கங்கள் நம் மூளையில் நம்மை அறியாமலே புதைந்திருக்கிருக்கிறது.

நம்முடைய மூளை என்னும் உறுப்பு ஒரு முறை கற்றுக்கொண்ட  கலையை  அப்படியே அழியாமல் தேக்கி வைத்துக் கொள்கிறது  . ஆகவே நம்மை அறியாமல் நம்முள் இருக்கும் கலைகளை ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்த்து மீண்டும் பழங்கலைத் திறமைகளை உயிர்ப்பிப்போம் .

இப்படியாக  நாம் சுவைத்த தின்பண்டங்களை நாமே மீண்டும் ஒரு முறை செய்து பார்த்து அனுப்பவப்பட்டுக் கற்றுக்கொண்டு வீட்டிலேயே செய்ய ஆரம்பித்தால். தேவையில்லாத நோய்களைத் தடுக்கலாம்.உடற்பயிற்சிக் கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லாமல்  இயற்கையாக ஆரோக்கியமாக வாழ வகை செய்துகொள்ளலாம் 

நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், இவை போன்று ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்வதால் மனமும் அதிலேயே ஒன்றி ,தியானம், யோகா போன்றவைகளைச் செய்வதால் உண்டாகும் பலனை நம் வேலைகளை நாமே செய்து கொள்வதால் அடையலாம் என்று தோன்றியது. அது மட்டுமல்ல உரலில் மாவு ஆட்டுதல், நம் துணிகளை நாமே துவைத்தல், அம்மிக்கல்லில் அரைத்தல், கீழே உட்கார்ந்து  உணவு உண்ணுதல் போன்ற இயற்கையான வழி முறைகளால் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம்.

நாமே பொருட்களை வாங்கி வீட்டிலேயே செய்வதால் சுத்தமாகவும், சிக்கனமாகவும்  இருக்கும். வெளியில் வாங்கினால் ஒரு அப்பளம் ஐந்து ரூபாய்கள் என்றால் நாமே செய்தால் ஐந்து அப்பளங்கள் ஒரு ரூபாய்க்குள் அடங்கும். பணத்தையும் சேமிக்கலாம் .ஆரோக்கியத்தையும் உடல் வளத்தையும் மீட்டலாம்.  இப்படி நான் அப்பளம் இட்ட செயல் முறையை ஒளிப்படமாகப் பார்க்கவேண்டுமென்றால்  ஆர்வத்துடன் கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்குங்கள்

http://www.youtube.com/watch?v=l-KMgutDJEg&feature=plcp

அன்புடன்

தமிழ்த்தேனீ