திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Friday, March 16, 2012

" கைச்சூடு “ சிறு கதை

” கைச்சூடு “ சிறு கதை வல்லமை இதழில் படிக்க
http://www.vallamai.com/?p=1929

” கைச்சூடு “


தொலைபேசி அழைப்பு கிர்ரிங்என்றது. எடுத்துப் பேசினேன். மறு முனையில் 14 வயது நிரம்பிய சுரேஷ், என் அக்கா மகன்.

என்னப்பா சுரேஷ், என்ன விஷயம்?” என்றேன்.

மாமா, அப்பாவுக்கு உடம்பு சரியில்லைடாக்டர் வந்து பாத்துட்டுப் போனார்என்றான்.

என்ன ஆச்சு?” என்று பதறினேன்.

தலை வலிக்கிறது என்று மாலையில் வந்து படுத்தார். தலைவலி தாங்காமே சுவத்திலே முட்டிக்கறார். அதுனாலே டாக்டரை வரவழைச்சு காமிச்சோம். டாக்டர் வந்து பாத்துட்டு, சலைன்  வாட்டர் ஏத்தணும்னு வீட்டிலேயே ஏத்தினார்என்றான்.

இப்போ எப்பிடி இருக்கு?” என்றேன். ஆனால் மனத்துக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத கிலி.

மாமா, எப்பிடி மாமா சொல்றது? டாக்டர் வரும்போதே அப்பாவுக்கு  உயிர் போயிடுத்து. அம்மாவைச் சமாளிக்கத்தான் சலைன் வாட்டர் ஏத்தறா மாதிரி டாக்டர் செட்டப் செஞ்சி வெச்சிட்டுப் போனார். டாக்டர் எங்க பக்கத்து வீட்டு அம்மாகிட்டே சொல்லிட்டுப் போய்ட்டாரு. அந்த அம்மா  என்கிட்ட மட்டும் சொன்னாங்க. ஆனா அம்மாவைப் பக்கத்திலே உக்கார வெச்சிட்டு, உங்களுக்கு போன் செஞ்சேன்என்றான்.
நான் உடனே சமாளித்துக்கொண்டு, “அம்மாகிட்ட சொல்லிடாதே. நாங்கள்ளாம் வர வரைக்கும் சலைன் வாட்டர் ஏறுதுன்னு சொல்லு. சீக்கிரம் நாங்க வந்துடறோம்என்று சொல்லிவிட்டு, முடிந்த வரை உறவினர்களுக்குச் செய்தியைச் சொல்லிவிட்டு, கிடைத்த பேருந்தில் ஏறி, பெங்களூருக்குக் கிளம்பினேன்.

இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் நினைவு வந்தது, எதுவும் சாப்பிடவில்லை என்று. ஆனால் சாப்பிடப் பிடிக்கவில்லை. தொண்டை வறண்டு போனது. சரியென்று எதிர்க் கடையில் ஒரு விக்ஸ் மாத்திரை வாங்கி வாயில் போட்டுக்கொண்டேன். விக்ஸ் மாத்திரையின் இனிப்பு, தொண்டையில் இறங்கியதும் நினைப்பு வந்தது. என்ன இது? துயரத்தில் இருக்கும் போது கூட மனிதனுக்குப் பசியும் தாகமும் துன்பப்படுத்துவது  நிற்பதில்லை என்றும், அதுவும் போதாக் குறைக்கு விக்ஸ் மாத்திரையின் இனிப்பு தொண்டையில் இறங்கியது. அப்போதுதான் நினைவுக்கு வந்தது  இது போன்ற நேரத்தில் யாராவது இனிப்பு உண்பார்களோ? ஏன் இப்படி ஏடாகூடமாக ஏதோ செய்துகொண்டிருக்கிறேன் என்னும் நினைவு வந்தது.

என்னதான் மனத்தை அமைதிப்படுத்திக்கொண்டு தைரியமாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், எல்லா நடிப்புகளுமே மற்றவரை ஏமாற்றப் பயன்படுகிறதே தவிர, நம் மனத்தை ஏமாற்றவே முடிவதில்லை என்னும் உண்மை புரிந்தது. விக்ஸ் மாத்திரையின் இனிப்பே கசந்தது. கீழே இறங்கிப் போய்க் குப்பைத் தொட்டியில் அதைத் துப்பினேன். விக்ஸ் மாத்திரையைத் துப்ப முடிந்தது. ஆனால் நினைவுகள்?

ஆமாம், என் மனத்துக்கு இனிய சகோதரி. அவள் துன்பத்தில் இருக்கிறாள். அவளின் வாழ்க்கைத் துணை, அவளை விட்டுப் பிரிந்தது கூடத் தெரியாமல், பரப்ரும்மமாய்ப் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறாள்.

தன் கணவனுக்கு ஏதும் ஆகக் கூடாது  என்று. இனி ஆவதற்கு என்ன இருக்கிறது? கொடுமை அல்லவா இது? மனிதர்களுக்கு ஏன் இது போன்ற நிலைகளை இறைவன் ஏற்படுத்துகிறான் இறைவன்? நாத்திகர்கள் சொல்வது போல்  இறைவன் என்பவன் ஒருவன் இல்லையோ! அல்லது இருந்தும் இரக்கம் இல்லாதவனாகத்தான்  இருக்கிறானா இறைவன்? மனம் கசந்து போனது, விக்ஸ் மாத்திரை போல். இறைவனும் விக்ஸ் மாத்திரை போலத்தான்.

வேண்டும்போது போட்டுக்கொண்டாலும் முதலில் இனித்தாலும் அதன் பிறகு துயரங்கள் நம்மை மூழ்கடிக்கும் போது கசந்து போகிறான். எப்போது கசக்கிறான்? எப்போது இனிக்கிறான் என்பதும். எந்தச் சூழ்நிலையிலும் நம் இருமலைப் போக்காமல் வெறும் ஏமாற்று வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறான் நம் துன்பங்களைப் போக்காமல். அதிகம் கேட்டால் விதி என்று சமாளிக்கப் பல பேர் இருக்கையில் தனக்கு ஒன்றும் கவலையில்லை என்பது போல கல்லுளி மங்கனாக இருக்கிறான் இறைவன். கல்லுளி மங்கன். ஆமாம் கல்லுளி மங்கன்தான்.

மனத்தில் ஏதோ சிந்தனைகள். சார் டிக்கட் வாங்கறீங்களா?” என்று நடத்துநரின் குரல் கேட்டதும் மீண்டேன். டிக்கட் வாங்கி பையில் வைத்ததும் மீண்டும் கை மனத்தில் பட்டுவிட்டது போலும். ஸ்விட்ச் போட்ட ரேடியோ போல பாடத் தொடங்கியது மனக் குரல்.

எனக்குப் பத்து வயதிருக்கும். என் அக்காவுக்குப் பதினாலு வயது, ஆனால் என் கையைப் பிடித்துக்கொண்டு உலகையே வலம் வருவாள் தைரியத்துடன். ஆம் அப்படி ஒரு அசாத்திய நம்பிக்கை என் மேல். எப்போதும் என் உள்ளங்கை, அவள் கைகளுடன் இணைந்தே இருக்கும். அந்தப் பாசமான அக்காவின் கைச்சூடு, இப்போதும் என்னால் உணர முடிகிறது.

யாரேனும் தவறான பார்வையை என் அக்காவின் மேல் வீசினால் ஒரு முறை முறைப்பேன், அந்த வயதிலேயே. அது எப்படியோ, அது தவறான பார்வை என்று எனக்குப் புரியும். என் அக்கா சிரிப்பாள். வீட்டுக்கு வந்தவுடன் கேட்பாள்.

ஏன்டா தைரியமா முறைக்கிறியே, அவன் அடிச்சா  என்ன பண்ணுவே?’

ஓங்கி ஒரு உதை விடுவேன். அவன் கீழே போயி விழுந்துடுவான், ஆமாஎன்பேன் ஆக்ரோஷத்துடன்.

விழுந்து விழுந்து சிரிப்பாள் அக்கா.

வளையல் கடையா, காய்கறிக் கடையா.. எல்லாக் கடைகளுக்கும் கோயிலுக்கும் என் கைப்பிடித்தே கூடவே அழைத்துச் சென்ற அக்கா. எப்படி பேரம் பேசுவது, எப்படி சாமி கும்பிடுவது என்றெல்லாம் எனக்கு நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் இருந்த அக்கா. இதமாகவும் பதமாகவும் எனக்கு வாழ்க்கையின் நடைமுறையை உணர்த்திய அக்கா.

நன்றாக நினைவிருக்கிறது. முதன் முதலில் அவள் படிக்கும் பள்ளியில் என்னை முதல் வகுப்பில் சேர்த்துவிட்டு, அவள் அவளுடைய வகுப்புக்குச்  சென்றாள். பத்திரமா இருக்கணும், நான் மாடிலே வேற கிளாஸ்லே இருக்கேன், பயப்படாதேஎன்றெல்லாம் சொல்லிவிட்டு அவள் அகன்றதும் வீரிட்டு அழ ஆரம்பித்தேன்.

 பிடிவாதம் பிடித்தேன். ஆக, முதல் நாள் அவள் வகுப்பிலே அவள்கூடத்தான் உட்கார்ந்தேன். ஆமாம், முதன் முதலாக ஒண்ணாம் வகுப்புக்குப் பதிலாக, ஆறாம் வகுப்பில் உட்கார்ந்த ஒரே மாணவன் என்னும் பெருமையை எனக்களித்த அக்கா.

அவளுக்கு இப்படி ஒரு சோதனையா? அதுவும் வாழ்க்கைத் துணையை இந்த வயதிலேயே இழந்து அல்லல் படும் துயரம் அவளுக்கு வாய்த்ததா? தெய்வமே இது நியாயமா? என்றெல்லாம் மனத்துக்குள் அரற்றிக்கொண்டிருந்தாலும் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்க முடிந்தது எனக்கு. அக்கா சொல்லிக் கொடுத்த பல பாடங்களில் இதுவும் ஒன்று.

ஆயிற்று. பேருந்து, பெங்களூரை அடைந்தது. அனைவரும் வீட்டுக்குள் நுழைந்தோம்.

அக்கா சலனமே இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க, எனக்கு அடி வயிற்றிலிருந்து பீரிட்டு வந்த துக்கத்தை, எப்படி அடக்கினேனோ தெரியவில்லை. அக்காவுக்கு விவரம் சொன்னோம். தலையைக் கோதி முடித்துக்கொண்டு எழுந்தாள். அடுத்து, அவள் போட்ட கட்டளைகளால் அத்தனை காரியங்களும் நடந்தன. பதினாறு நாட்கள் காரியங்கள் எல்லாம் முடிந்தது. எல்லாம் முடிந்து ஓய்வாக உட்கார்ந்தோம்.

என் அக்கா அத்தனை பெரியவர்கள் இருந்தும் என் அருகில் வந்து  உட்கார்ந்து, என் கையைப் பிடித்துக்கொண்டாள். அவள் மனத்தின் முழுச் சூடும் அவள் கைவழியே நான் உணர்ந்தேன்.

அக்கா  எப்பிடிக்கா?”  என்று ஆரம்பித்தேன்.

என் கையை இறுகப் பிடித்து அழுத்தியபடி, என் அக்கா சொன்னாள்.

எனக்கு அவர் போன வினாடியே தெரிஞ்சி போச்சுடா! சுண்டு வெரல்லே அடிபட்டாலே  துடிச்சுப் போறமே என் உயிரே போறதுன்னா எனக்குத் தெரியாம இருக்குமா எனக்கு தெரியும்டா  ஆனா இந்தப் பசங்க, சிறுசுங்க பயந்துடப் போறதேன்னுதான்  நீங்கள்ளாம் வர வரைக்கும் எதுவும் தெரியாத மாதிரி உட்காந்திருந்தேன். இனிமே நான் என்னடா செய்வேன்என்று சொல்லிக்கொண்டே ஆக்ரோஷமாய் அழ ஆரம்பித்தாள்.

நாங்கள் உறைந்தோம்!

அன்புடன்
தமிழ்த்தேனீ








"  உருகாத வெண்ணை "   http://www.vallamai.com/literature/poems/17781/   கவிதை படிக்க வல்லமை மின் இதழில்

                                  "  உருகாத வெண்ணை "

உன்னைக் கரம் பிடித்த நாள் முதலாய் ஆதரவாய் கைகொடுத்து என்னைக் கைவிடாமல் எப்போதும் காக்கின்றாய் என் தாயாய். மனமிறங்கி உன்சுற்ற வயல் தனிலே நாற்றாய் நீ இருக்க கருணை கொண்டு சுற்றமெல்லாம்- என் வயலில் நட்டார்கள் வந்தாய்நீ  வயல்செழிக்க எம்குலம் தழைக்க

முன்னைச் செய்த பயன் முழுமையாய்க் கிடைத்தாற்போல் முன்னிருந்து நடத்துகிறாய் முழுவாழ்வை செழிப்பாக்கி   பண்பால் ஆளுகிறாய் அன்பை முன்னிறுத்தி அருங்குணங்கள் அத்தனையும் அணுக்கி உள்ளே தெம்பாய் உள்ளடக்கி தெள்ளிய அமுதாய்  தேனடைத் தேனாய் ஆனாய் நீ

பொன் பொருளென்று சொத்துக்கள் யாதுமிலை எனக்கென்று சொந்தமென்று வந்த பின்னே அத்தனையும் சேர்த்துவிட்டாய் என் வாழ்வில் தானாய் சேர்ந்ததெல்லாம் சிக்கனமாய் முடிந்து வைத்து மொத்தமாய் என்னிடத்தே சோர்ந்த போதெல்லாம் முன்கூட்டி அளிக்கின்றாய் தேவைதனையறிந்து

சேர்த்துவைக்கும் குணமறியேன் எனக்கும் சேர்த்து சேர்த்துவைத்து குணக்குன்றாய்  இணைந்தே வாழுகிறாய்  எனக்கும் சேர்த்து பொன் கொடுத்தாய் பொருள் கொடுத்தாய் போதாது போதாது என்றே நீயும் இளந் தளிராய் என்குலம் தழைத்திடவே  வாரிசுகளும் எமக்களித்தாய்

கண்ணிமைக்கும் நேரத்திலே கடின்மிகு சுமைகளெல்லாம் காணாமல் ஆக்குகிறாய் களிப்பே ஊட்டுகிறாய்  கலைகளெல்லாம் ஊட்டுகிறாய் கவிஞனாய் ஆக்குகிறாய் கலையெல்லாம் எனை நோக்கி களிப்புடனே ஓடிவந்து  கருணைகொண்டு சேர்ந்திடவே வகை செய்து

எனைப்பட்டை தீட்டுகிறாய் சாணைக் கல்லாய் நீயிருந்து சாத்திரமாய் தீட்டி என்னை கலைமகள் கைப்பொருளாய் மீட்டுகிறாய் கவின் மிகு சுவையூட்டி களிப்பாக மாற்றுகிறாய் .கவலை போக்குகிறாய் சொக்கவைத்து சுழலவைத்து  எக்கட்டு ஆனாலும் இக்கட்டுதனைக் களையும் இயந்திரமாய் ஆனவள்  நீ

அடகுவைத்த அத்தனையும் மீட்டுகிறாய் அன்பான வட்டி தந்து அருமையாய் கட்டுக்குள்ளே  கட்டியெனை ஆட்படுத்தி  ஆளுகின்றாய் பரிவுடனே பலநூல் கற்றேன் பல்கலைக் கழக பட்டங்கள் நான் பெற்றேன்-பட்டையங்கள் பல பெற்றேன்  மதிப்பார் யாருமில்லை மறந்தே போகின்றார்.

ஒரு நூலெடுத்து உறுளி மஞ்சள் உரைத்தே தடவி உன் கழுத்தில் நாண் இட்டேன் மங்கலமாய் முடிச்சிட்டேன்  அது முதலாய் , ஆண்மகனாய் ஆனேன் நான் மாப்பிள்ளையாய் ஆனேன் நான் -குடும்பஸ்தன், தந்தை,  பெரியப்பா, சித்தப்பா, அத்தான், என்றெல்லாம் பலபட்டம் பெற்றேன் நான்

எல்லோரும் துதிக்கின்றார் நினைவில் என்னை மதிக்கின்றார். வேறென்ன வேண்டுவது இத்தனையும்  உன்னாலே வந்ததென்று நானறிவேன் உனையன்றி வேறு துணை  வேண்ட மாட்டேன் இல்லறத்தின் மாற்று வழி போகமாட்டேன் பிணைக் கைதிபோலாகி  பிணைப்பால் நான் மனிதனானேன்

எப்பிறவி எடுத்தாலும் உன்தனையே நாடிடுவேன்  உன் துணையாய் ஆகிடுவேன் உயிர் அளித்த என்தாயின் உற்ற துணையானவளே -தாய்க்குப் பின்தாரமென்று பெரியோர்கள் சொல்லிவைத்தார் இன்றுணர்ந்தேன் அதிசியத்தை நான் சேயான ரகசியத்தை ஒரு  கணமும் மறக்க மாட்டேன்

இத்தனையும் செய்தாய் இன்றளவும் என் நலமே நாடி நாடி-உருகாத வெண்ணையும் ஓரடையும் செய்து வைத்தே வேன்டுகின்றாய் என் நலம் நாடுகின்றாய் உனக்கோர் நன்றி  சொல்ல நாவெடுத்தேன் ஆணென்ற கர்வமது அடக்கியே ஆண்டதம்மா சொல்ல வேறு வழியில்லை-

எழுத்தாணி ஏந்தியே நன்றியினை நானெழுத நானெழுத நானெழுத  முடிப்பதற்கோர் வழியுமிலை முடித்திடவே  வழியுமிலை உன் பெருமை உணர்ந்ததனால் இலக்கணங்கள் ஏதுமில்லா இக்கவிதை எம் தமிழால் நானெழுதி நன்றி உரையாய் உன்னிடத்தே அளிக்கின்றேன்

எம்போன்றோர் தலைக்கனமும் தானிறங்கி நன்றி சொல்ல ஒரு வாய்ப்பாய்  உன்னிடம் அளித்துவிட்டு மறைந்து நின்று  பார்க்கின்றேன்  உன் முகவிகசிப்பை தானியங்கி கருவியான  தாய்மையது போற்றுகின்றேன்-ஆட்பட்டேன் ஆட்பட்டேன் ஆட்கொண்டாய்  தாயாய் நீ

முத்தாய்ப்பாய் ஒரு முத்தம் அளித்தே மகிழ்கின்றேன் வேறு வழி தெரியவில்லை ஓரடையும் வெண்ணையும் சுசிருசியாய் நெஞ்சினிலே சுவையாய் இறங்குதம்மா  நோன்பெல்லாம் உன்னுடனே  இணைந்தே செய்திடுவேன் உன்நலமும் வேண்டிநின்று நன்றியுடன் நானும் சேர்ந்து

 அன்புடன்
தமிழ்த்தேனீ